fbpx
Homeதலையங்கம்ஜி7 நாடுகள் முடிவால் உயரும் தங்கம் விலை!

ஜி7 நாடுகள் முடிவால் உயரும் தங்கம் விலை!

ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக தங்கம் இறக்குமதி செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தி முடக்கும் வகையில் ஏற்கனவே நேட்டோ நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது ஜி7 உறுப்பு நாடுகளும் இந்த புதிய தடையை அறிவித்துள்ளன.

ரஷ்யா இயற்கை எரிபொருளுக்கு அடுத்தபடியாக தங்கத்தைத் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்து, பெருமளவில் அந்நியச்செலாவணியை ஈட்டி வருகிறது.

ஓர் ஆண்டில் உலகம் முழுதும் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 10%, அதாவது 350 முதல் 380 டன் வரையிலான தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இவற்றின் தோராய ஏற்றுமதி மதிப்பு சுமார் 15.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் அந்நாட்டு பொருளாதாரத்தை மேலும் முடக்க அமெரிக்கா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஆனால், ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிப்பது சர்வதேச சந்தையில் எதிரொலிக்கும். ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடை விதிக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் ரஷ்ய தங்கத்திற்கு தடை விதிக்கப்பட்டால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்திடம் இருந்து தான் அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற வர்த்தக மையங்களில் ரஷ்யாவின் தங்கம் தான் அதிகம் புழங்கி வருகிறது.

இந்த நாடுகள் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய மறுக்கும் பட்சத்தில், உலகில் சீனாவிற்கு பிறகு அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியாவிற்கு தேவையான தங்கம் கிடைக்காது.

இதனால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ள இந்தியர்களின்… தங்க நகைகள் மீது மோகம் கொண்டு அவற்றை வாங்கிக் குவிக்கும் இந்திய பெண்களின் பாடு தான் திண்டாட்டம்!

படிக்க வேண்டும்

spot_img