கோவை அடுத்த துடியலூர், சின்னத்தடாகம், வீரபாண்டி, பன்னிமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் செங்கல் சூளைகள் அனுமதியின்றி மண் அள்ளுவதாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கனிம வளத்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து, செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் அங்கு பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல் சூளை தொழிலை மீட்டெடுக்க கோரி, கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் உட்பட செங்கல் உற்பத்தி சார்ந்த அமைப்புகள் சார்பாக கோவை சின்னத்தடாகம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடாகம் செங்கல் தொழில் நலச்சங்க அமைப்பாளர்கள் கோபி நாத், பரசுராமன், சுதாகர், பிரதீப் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடை பெற்ற இதில், 500க்கும் மேற்பட்டோர் செங்கல் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பதா கைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் விறகு வியாபாரிகள் சங்க தலைவர் சிவகணேஷ், மளிகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் மயில்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கேசவமணி உட்பட 250க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், விறகு வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக தடாகத்திலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.



