fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கோவை ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

அப்போது அவர், ஏசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் குழந்தை ஏசு சொரூபத்தை தனது கையில் கொண்டு வந்து ஏந்தி காண்பித்தார். பின்னர் குழந்தை ஏசு சொரூபம் அலங்கரிக்கப்பட்ட குடிலில் வைக்கப்பட்டது.

இதில் ஏராளமானோர் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.

மேலும் ஆங்காங்கே நட்சத்திர விளக்குகளும் தொங்கவிடப்பட்டு இருந்தது. கொரோனா காலம் என்பதால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸில் இருந்து விடுபட வேண்டியும், வரும் காலங்களில் நோய்த் தொற்றில் இருந்து விடு பட வேண்டும் எனவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்தனர். மேலும் கேக் வெட்டி அதனை பொதுமக்களுக்கு வழங்கினர். தொடர்ந்து கிறிஸ்தவ ஆலயங்களில் கூட்டுத்திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

படிக்க வேண்டும்

spot_img