கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக ஆசிரியர்களும், நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறி மாணவிகளும் மாறி மாறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்துறை பேராராசிரியரான ரமேஷ் என்பவர் மீது சக ஆசிரியர்கள் புகார் அளித்ததன் பேரில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே ரமேஷ் மீண்டும் கோவை அரசு கலைக்கல்லூரிக்கே பணிக்கு வந்துள்ளார்.
இந்த சூழலில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் நேற்று காலை கல்லூரி வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அதே கல்லூரியில் படிக்கும் ஆய்வு மாணவிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அதே இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் ரமேஷ் மீது எந்தவித தவறும் இல்லை, அவரை பழிவாங்குவதற்காக சக பேராசிரியர்கள் இவ்வாறு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்களும், மாணவிகளும் தர்ணாவில் ஈடுபட்டு மாறி மாறி கோஷங்களை எழுப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



