கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப் பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம்,வாலாங்குளத்தின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தது.
இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திறந்த வெளி அரங்கம் விளையாட்டு திடல், உணவுக்கூடங்கள், படகு துறை மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூபாய் 62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
செல்வ சிந்தாமணி குளம் ரூபாய் 31.47 கோடி மதிப்பீட்டிலும் வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூபாய் 24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாலாங்குளத்தின் கரையானது ரூபாய் 67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூபாய் 31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம் படுத்தப்பட்டுள்ளது. இக்குளங்க ளில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டத்தில் மட்டுமே இருந்தது. நிரந்தரமாக படகு சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில்.
உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி விரைவில் துவங்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
பெரியகுளத்தில் 4 இருக்கைகள் கொண்ட இரண்டு படகுகள், இரு இருக்கை கொண்ட 1 படகு, 8 இருக்கை கொண்ட மோட்டார் போட் ஆகியவற்றுடன் படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில வாரங்களில் வரும். இதில் மோட்டார் போட் தற்போது தயார் நிலையில் உள்ளது என்றார்.
படகு சவாரி செய்ய எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் கூறுகையில் கோவை மக்களுக்கு வ உ சி உயிரியல் பூங்கா ஒன்றே பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது ஆனால் அதில் தற்போது மக்களுக்கு அனுமதி இல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் குளங்கள் அழகு படுத்தப்பட்டன.
அதில் படகு சவாரி அறிவிப்பு வெளியாகி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது விரைவில் திட்டத்தை துவங்க வேண்டும் குறிப்பாக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் படகு சவாரி இருக்க வேண்டும் என்றனர்.



