நடந்து முடிந்த மக்களவை கூட்டத்தொடர் மிகச்சிறப்பாக நடந்தேறியது. அதன் செயல்பாட்டுத் திறன் 129 சதவீதமாக இருந்தது என சபாநாயகர் ஓம்பிர்லா பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். அதேபோல மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 98 சதவீதமாக இருந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முயன்றும் அதற்கு மக்களவை சபாநாயகரும் மாநிலங்களவைத் தலைவரும் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
நீட் தேர்வு உள்ளிட்ட சில பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதே சமயத்தில் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஒருநாள் முன்னதாகவே முடிக்கப்பட்டாலும் பட்டியலிடப்பட்ட அனைத்து மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டன.
கடந்த காலங்களில் நடந்தது போல பாராளுமன்றம் பல நாட்கள் முடங்கிப்போகாமல் செயல்பட்டது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்தது.
வரும் கூட்டத் தொடர்களிலும் இது தொடரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். அதே நேரத்தில் புதிய பாராளுமன்றம் அமைந்து மூன்றாண்டுகளாகியும் இன்னும் ஒரு குறை தீராமல் நீடிக்கிறது.
மக்களவை துணை சபாநாயகர் தேர்தல் இதுவரை நடந்தேறவில்லை. வரும் கூட்டத் தொடரிலாவது இந்த குறை தீர்க்கப்பட வேண்டும்.
மக்களவை துணை சபாநாயகர் யார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருப்போம்!



