அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
அன்றைய தினமே அதிமுக சட்ட விதி 20அ பிரிவு 7ம் தேதி பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல் 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, “அதிமுக பொதுக்குழு செல்லும்” என தீர்ப்பளித்தனர்.
உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரம் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது,” என்று உத்தரவிட்டு அடுத்த விசாரணையை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொது செயலாளர் தேர்தலை நடத்த முடியாத சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது உச்சநீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஓ.பி.எஸ் தரப்பு நம்புகிறது.
உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு நிரந்தரத் தடை விதிக்கவில்லை. ஈபிஎஸ் தரப்பு தாமாக முன்வந்து இந்த தேர்தலை நடத்த மாட்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியதாகக் கூறப்பட்டது.
பொதுக்குழு விவகாரத்தில் நவம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி பிறப்பிக்கும் இறுதி உத்தரவே, அதிமுக கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதற்காகவே இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே காத்திருக்கின்றனர். அதிமுக தொண்டர்களும் காத்திருக்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய நாமும் காத்திருப்போம்!



