ஆயுதப்படை காவல்துறையினரை அழைத்துச் செல்லும் வாகனங்களில் சிறய நூலகத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாநகர காவல்துறை சார்பில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டன. காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வாகனங்களில் நூலகம்
இதனிடையே கோவையில் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பணி நிமித்தமாக அழைத்துச் செல்லும் வாகனங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்கள், உரைநடை, கவிதைகள் அடங்கிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்து போலீசாருக்கு புத்தகங்களை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, விளையாட்டுப் போட்டிகள், போலீசாருக்கான உடற்பயிற்சி கூடம், காவல் நிலையங்களிலேயே நூலகம் அமைக்கப்பட்டன.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகம் மூலமாக வெளியூர்களுக்கு பணிக்கு செல்லும் காவலர்கள் பணி முடிந்ததும், புத்தகங்களை எடுத்து படிக்க முடியும். என்றார்.