fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 367 மனுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 367 மனுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 367 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று அவற்றை தீர்ப்பதற்காக தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் துறை ரீதியான விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தலா ரூ.9,050 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு ரூ.45,250 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, 35வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நாடகத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆர்.குமாரராஜா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img