மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பறக்கும் படையினர்,நிலை கண்காணிப்புக்குழுவினர்,வீடியோ டீம், வீடியோ கண்காணிப்புக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்களைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே பேசிய தேர்தல் செலவின மேற்பார்வையாளர் சந்தீப் குமார் மிஸ்ரா தேர்தல் பணிகள் தொடர்பாக பறக்கும் படை உள்ளிட்ட அனைத்து குழுவினரிடமும் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய சந்தீப் குமார் மிஸ்ரா தேர்தல் பணிகளில் சிரமம் உள்ளதா? என அலுவலர்களிடம் கேட்டறிந்தேன். ஒவ்வொரு குழுக்களுக்கும் அவர்களது பணியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகளவிலான பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலை கண்காணிப்புக்குழுவினர் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி சோதனை மேற்கொள்ளலாம்.
ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு ஆவணம் இல்லை என்றால் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களை வீடியோ டீம் முழுமையாக பதிவு செய்து அதனை வீடியோ கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் பகுதியில் அனைத்து அதிகாரிகளின் தேர்தல் பணிகளும் சிறப்பாக உள்ளது என கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் அமுதா,காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன்,கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.