மேட்டுப்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை காரணமாக 18 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் எஸ்.எஸ்.டி பிரிவு அதிகாரி கௌதமன், ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவரது வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வாகனத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் பணத்துக்கான ஆவனம் கேட்ட நிலையில் கூடலூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றதால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர்.



