fbpx
Homeபிற செய்திகள்நீட்: பெற்றோர் விருப்பமும் ஆளுநர் ரவி பிடிவாதமும்!

நீட்: பெற்றோர் விருப்பமும் ஆளுநர் ரவி பிடிவாதமும்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் மாணவ, மாணவிகள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு மாநிலங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதை அவர் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், நீட் இளநிலைத் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் சுமார் 100 பேரை அழைத்து அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடினார்.

இந்தக் கூட்டத்தில் பெற்றோர் தரப்பில் சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் என்பவர் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சார்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

எனவே நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் என ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்பினார். இதனால் ஆளுநர் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக அம்மாசியப்பனை நோக்கி உட்காருங்கள் என மிரட்டி அவரிடம் இருந்த மைக்கை பறித்தனர்.

பின்னர் பேசிய ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்று கூற அங்கிருந்த பெற்றோர்கள் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவியின் தந்தை அம்மாசியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நீட் தேர்வுக்கு படித்தால் 20 லட்சம் செலவாகும் எப்படி எல்லோராலும் இவ்வளவு செலவிட முடியும். ஆளுநர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவே முடியாது என்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம்.

நீட் தேர்வுக்குப் பின்னால் சதி உள்ளது. பயிற்சி மையங்களை வைத்து கொண்டு தான் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயராகின்றனர். நீட் தேர்வினால் 15 குழந்தைகள் இறந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 15 மணி நேரம் படித்ததாக சொல்கிறார்.

மாணவர்கள் இளம் வயதில் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?. கடந்த 70 ஆண்டுகளில் தமிழ்நாடு மிக சிறந்த மருத்துவ கட்டமைப்புடன் இருக்கிறது.
இந்த சாதனைகள் எல்லாம் நீட் தேர்வு இல்லாமல் உருவானது தான்.

நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்“ என்று கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதாவை கையெழுத்து இட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, தான்தோன்றித் தனமாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும் எனவும் திமுக, மதிமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் போன்ற பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

மாநில அரசின்செயல்பாடுகளை முடக்கும் அலலது இடையூறு ஏற்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பிடிக்கவில்லை.

நீட் தேர்வு வேண்டாம் என்றால் விடவா போகிறார்கள்? பாவம், தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் & தமிழ்நாடு அரசை மட்டுமே அவர்கள் நம்பி இருக்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img