தமிழகத்தில் கோடை வெயில் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது… அதுவும் மார்ச் மாதத்திலேயே கொளுத்தத் தொடங்கிவிட்டது. எப்பவுமே ஏப்ரல் மாதத்தில் வெயில் தாக்கம் ஆரம்பித்து மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின்போது உச்சத்திற்கு செல்லும். ஆனால், பருவகால மாற்றத்தால் இப்பவே தமிழகம் அனலால் துடிக்கிறது.
மனித உயிர்களையும் கடும் வெயிலுக்குக் காவு கொடுக்கும் வேதனை நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது. 19ம்தேதி ஓட்டுப்பதிவின்போது 2 பேர் சேலத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி அருகே வெயிலில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடும் வெப்பத்தால் உடல்நலம் பாதித்து ஒரு இளம்பெண் ஈரோட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றைக்குகூட, தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3, 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் தாக்கி உள்ளது. சேலத்தில் 107, தர்மபுரி 106 டிகிரி என வெயில் கொளுத்துகிறது.
அந்தவகையில் மொத்தம் 14 மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் அடித்து கொண்டிருக்கிறது. எப்படியும் வரும் ஜூன் மாதம் வரை இந்த வெயில் இருக்கும் என்கிறார்கள். உள்மாவட்டங்களில், அடுத்த 4 தினங்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு உள்படி 16 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
வெயில் தாக்கத்தால் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. மயக்கம், சோர்வு தாக்கி பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெப்ப அலை என்பது தமிழகத்துக்கு புதிது கிடையாது. எனினும், சராசரி வெப்ப அளவைவிட கூடுதலாக 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது, அதை வெப்ப அலை என்கிறோம்.
இதுபோன்ற வெப்ப அலையை மஞ்சள் அலர்ட் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இயல்பைவிட 5,6 செல்சியஸூக்கு மேல் அதிகமாக வெப்பம் தாக்கினால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படும். ஆனால், தமிழகத்தில் அது போன்ற நிலை தற்போது இல்லை.. அதேபோல, காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதாவது 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தால் உடலில் இருந்து வியர்வை ஆவியாக மாறாது. ஆவியாக மாறாமல் போகும்போது உடலில் உஷ்ணம் ஏற்பட்டு பலவித தொந்தரவுகள் வரும்.
தலைவலி, மயக்கம், சோர்வு போன்றவை ஏற்படக்கூடும். முக்கியமாக, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (ஸ்டோக்) ஏற்படக்கூடும். கடலோர பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தேவையான அளவு தண்ணீர் குடித்தும் நீர்ச்சத்து நிறைந்த ஆரோக்கிய பானங்களை அருந்தியும் சூரியன் உமிழும் உக்கிரமான வெப்பஅலை தாக்குதலில் இருந்து இருந்து மீள்வோம் & உஷாராக இருப்போம்!