fbpx
Homeபிற செய்திகள்கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை இருந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இன்றைய காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குந்தாவில் 23 மிமீ, கெத்தையில் 11மிமீ,பரளியில் 8 மிமீ, பில்லூர் அணை பகுதியில் 7 மிமீ, அவலாஞ்சி பகுதியில் 122 மிமீ மழை பொழிவும் பதிவாகியுள்ளது.இதனால் அணையின்மொத்த கொள்ளளவு ஆன 100 அடியில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 8,160 கன அடி நீரும்,மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தமாக பவானி ஆற்றின் வழியாக 14,160 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப்பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தேக்கம்பட்டி,நெல்லித்துறை, ஆலங்கொம்பு,சிறுமுகை,வச்சினம்பாளையம்,ஓடந்துறை,பாலப்பட்டி,ஊமப்பாளையம்,ஜடையம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பவானி ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ,துணி துவைக்கவோ கூடாது என மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தால் ஒலிபெருக்கி வாயிலாக கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img