கோவை அரசூர் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் கொள்ளுப்பாளையம் பகுதியில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.
இதில், ‘கோவை 5 டிஎன் என்சிசி பெண்கள் பிரிவு’ மாணவிகள் நூறு பேர் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள், தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
கேபிஆர் கல்லூரி முதல்வர் ராமசாமி, என்சிசி அதிகாரி லெப்டினண்ட் கர்னல் ஜோஷி, கேபிஆர் பொறியியல் கல்லூரி அணியின் என்சிசி பிரிவின்
லெப்டினண்ட் ஏ.கே.பிரியா ஆகியோர் வழிகாட்டுதலில், அரசூர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவிந்தராஜ், அரசூர் ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, கணேசன் ஆகியோர் முயற்சியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.