சாலையில் மயங்கி விழுந்து 30 நிமிடங்களாக இதயத் துடிப்பு இல்லாத நபருக்கு சிகிச்சை அளித்து மீண்டும் அவருக்கு மறுவாழ்வு அளித்து மனித நேயத்தை காட்டினர் கே.எம்.சி. ஹெச். மருத்துவர் குழுவினர். 54 வயது மதிக்கத்தக்க நபர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு நடுரோட்டில் மயங்கி விழுந்துவிட்டார்.
அருகிலிருந்தோர் அவரது மார்பை அழுத்தி முதலுதவி அளித்து கேஎம்சிஹெச் மருத்துவனைக்கு அழைத்து வந்தனர். அதற்குள் 15 நிமி டம் ஆகிவிட்டது. அவர் சுயநினைவு இழந்திருந்ததால் நாடித் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறிக்க இயலவில்லை.
டாக்டர் பாலகுமாரன், டாக்டர் ரமேஷ், டாக்டர் குணசீலன், டாக்டர் சிவகுமார், டாக்டர் திலீபன், டாக்டர் யுவராஜ் ஆகியோர் கொண்ட கேஎம்சிஹெச் மருத்துவக் குழுவினர் உடனடியாக செயல்பட்டு நோயாளியின் மார்பை அழுத்தி சிபிஆர் சிகிச்சை அளித்தனர்.
15 நிமிடத்தில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் ரத்த அழுத்தம் சீராகப் பராமரிக்கப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் நோயாளியின் உடல்நிலை மேம்பட்டு சுயநினைவு திரும்பியது. மூன்று நாட்களுக்குப் பிறகு எக்மோ கருவி அகற்றப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், சிபிஆர் என்ற உயிர்காக்கும் முதலுதவியின் முக்கியத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது.
அவசர சிகிச்சைப் பிரிவு, கேத் லேப், எக்மோ முதலான நோயாளிகளின் இன்னுயிரைக் காத்திடத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர்களையும் கேஎம்சிஹெச் மருத்துவமனை பெற்றுள்ளது.
போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் என்றார்.