கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக கவுன்சிலர்கள்
இந்நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு பங்கேற்க வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ் மற்றும் பிரபாகரன் இருவரும் விக்டோரியா ஹாலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளலூர் குப்பை கிடங்கில் முறைகேடு நடப் பதாக எழுந்த புகாரின் பேரில் மேயர் கல்பனா ஆனந்த்குமார் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அந்த முறைகேட்டிற்கு திமுக கவுன்சிலர்களும் உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பின்னர் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் இது குறித்து மேயரிடம் கேள்வி எழுப்பிய போது திமுக கவுன்சிலர்கள் எதிர்வாதத்தை முன் வைத்ததால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.
மேலும் இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலரும் மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு இது திமுக ஆட்சி நீங்கள் உத்தரவிட வேண்டாம் என அதிமுக கவுன்சிலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.



