fbpx
Homeபிற செய்திகள்ரோஹித் சர்மாவின் வரலாற்றுச் சாதனை!

ரோஹித் சர்மாவின் வரலாற்றுச் சாதனை!

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்டனும் செய்யாத அரிய சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நிலையில் ரோஹித் சர்மா 76 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்தப் போட்டியில் அதிக ரன் குவித்த வீரராகவும், இந்தியாவின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் மூன்று வெவ்வேறு கேப்டன்கள் ( வெஸ்ட் இண்டீஸ் கிளைவ் லாய்ட், ஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங், இந்தியா எம்.எஸ்.தோனி) ஆட்டநாயகன் விருது வென்றுள்ளனர். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் எந்த அணியின் கேப்டனும் ஆட்டநாயகன் விருதை வென்றதில்லை.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்று இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார். ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற நான்காவது கேப்டனாக அவர் உருவெடுத்துள்ளார்.

இதைத் தவிர, இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை (2024) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2025) கோப்பைகளை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன், எம்.எஸ். தோனி டி20 உலகக் கோப்பை (2007) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) கோப்பைகளை வென்று கேப்டனாக இருந்தார். தோனி ஒருநாள் போட்டி உலகக் கோப்பையையும் (2011) வென்று கொடுத்திருந்தார், அந்த ஒரு சாதனையை மட்டுமே ரோஹித் சர்மா இதுவரை செய்யவில்லை.

ஆனால், எம்.எஸ்.தோனி செய்யாத மற்றொரு தனித்துவமான சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். நான்கு விதமான ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கும் இந்திய அணியை அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய முதல் கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைகள் மூலம் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா சாதனைகள் தொடர வாழ்த்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img