தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பரதர் நலக் கூட்டமைப்பு சார்பில் “பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாடு” பனிமய மாதா பேராலயம் முன்பாக நடைபெற்றது. தொழிலதிபர் சேசையா வில்லவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றத் தலைவர் ஹெர்மன் கில்ட் வரவேற்புரையாற்ற, சமூகச் செயற்பாட்டாளர் ஜெரோன் குமார் சிறப்புரையாற்றினார். ஆலன் பரதர், ராஜா போஸ் ரீகன், இக்னேஷ், ராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரித்து மீனவ மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்; மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் பரதர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும்; மற்றும் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் போன்ற பிரதான கட்சிகள் கடலோரத் தொகுதிகளில் மீனவ சமூகத் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், அரசுப் பணியில் 5% சிறப்பு ஒதுக்கீடும் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதுடன், மாநகராட்சி கட்டிடத்திற்கு அவர் பெயரையும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பாண்டியாபதி தேர்மாறன் பெயரையும் சூட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் தொழிலதிபர் ஜோ பிரகாஷ். பேராசிரியர் பாத்திமா பாபு. தவெக நிர்வாகி அஜிதா ஆக்னஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் மருத்துவர் கவின் கார்ட்வின் நன்றி கூறினார்.



