மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் முன்னுதாரண மாதிரி நிறுவனம் என்ற தகுதியின் கீழ் 2024-ம் ஆண்டுக்கான ஹெலன்கெல்லர் விருது ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்திற்கு கிடைத்தது.
விருது வழங்கும் விழா புதுடெல்லி அரசியலமைப்பு சட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிக்கான அதிகாரம் அளித்தல் துறையின் செயலாளர் டாக்டர்.ராஜேஷ் அகர்வால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தேசிய மையத்தின் தலைவர் பிரதீப் குப்தா ஆகியோர் இணைந்து விருது வழங்கினர். சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி பெற்றுக்கொண்டார்.
இன்டர்நேஷனல் ஹப்ஸ் நிறுவனத்தின் கலாச்சாரா முன்னோடி துறையின் இயக்குநர் ஷீதல் பாதி உடனிருந்தார். விருது பெற்ற, சக்தி மசாலா குழுமத்தின் நிறுவனர் பி.சி. துரைசாமிக்கு, இந்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயன், தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் – தலைவர் கே.வி.கே.பெருமாள், செயலாளர் எஸ்.பி.முத்துவேல் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.