நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ராசிபுரத்தில் செயல்படும் அணைக்கும் கரங்கள் மனநல மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளியில் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அங்கு பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களின் ஊதிய மானியம் மற்றும் உணவு விடுதி மானியம் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் 52 நபர்களும், ஆண்கள் மறுவாழ்வு மையத்தில் 61 நபர்களும் சிகிச்சை பெற்று வருவதைப் பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடியானார்.
மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், சத்தான உணவுகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட அவர் அங்கு பணியாற்றும் செவிலியர், சமூக சேவகர்கள் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களை முறையாகக் கண்காணித்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அணைக்கும் கரங்கள் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் 6 வயதிற்குட்பட்ட 40 குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா? என்பதையும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பள்ளியினை பார்வையிட்டு, மாற்றுத் திறனாளிகளாக வரும் நபர்களுக்கு முறையாக அரசு வழங்கும் சலுகைகளை தங்கு தடையின்றி வழங்கி, அவர்களுக்கான சிகிச்சை முறைகள், பயிற்சிகள் மற்றும் நடத்தப்படும் வகுப்புகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
செய்தியாளர்களுடன் சென்று நடத்திய இந்த ஆய்வின்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



