Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் 2,096 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் 2,096 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், 35-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்று பேசி கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக எல் & டி டெக்னாலஜிஸ் நிறுவனம், குளோபல் என்ஜினீயரிங் அகாடமியின் உலகத் தலைவர் டாக்டர் பி.பி.கொட்டுர் கலந்து கொண்டு, முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் மற்றும் ஒவ்வொரு துறைகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களுடன் பதக்கங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:

கற்றல் என்பது தொடர் நிகழ்வு. எல்லையற்றது. இந்தியாவில் 1,36,936 கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் 14 மில்லியன் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1,338 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் 4.3 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவற்றில் தகுதியான மாணவர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். புதிய இந்தியா ஏராளமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
1,688 இளநிலை மற்றும் 408 முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மொத்தம் 2,096 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் செந்தில்குமார் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img