fbpx
Homeபிற செய்திகள்வயநாடு துயர சம்பவத்தால் கேரளாவில் ஓணம் விழாக்கள் ரத்து - நேந்திரன் வாழைத்தார் விலை வீழ்ச்சி

வயநாடு துயர சம்பவத்தால் கேரளாவில் ஓணம் விழாக்கள் ரத்து – நேந்திரன் வாழைத்தார் விலை வீழ்ச்சி

மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் வாழைத்தார் ஏல மையத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப் பட்டு அங்கு குவியும் உள்ளூர் மற்றும் கேரளா போன்ற அண்டை மாநில மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப் படுவது வழக்கம்.

அதே போல் ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிட்டு இங்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இந்நிலையில், அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலச்சரிவு மற்றும் உயிரிழப்புகளால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை விழா கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.
இதனால், மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு வருகை தரும் கேரள வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து நேந்திரன் வாழைத்தார்கள் தேக்கமடைய துவங்கியுள்ளது.

வழக்கமாக ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டு கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் இல்லாததால் நேந்திரன் வாழையின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூபாய் 45 முதல் 55 வரை விலை போகும் நிலையில் தற்போது கிலோ ரூபாய் 25 முதல் 30 வரை மட்டுமே விலை கிடைப்பதால் வாழை விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக கேரள பகுதி வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவின் சோக நிகழ்வு மேட்டுப்பாளையம் பகுதி வாழை விவசாயிகளையும் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img