இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த எப். ஐ. சி .சி ஐ சாலை பாதுகாப்பு விருது, பல்வேறு சாலை பாதுகாப்பு துறையில் சிறந்த பங்களிப்புகளை வெளிப்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு சாலை பாதுகாப்பு பணி குழுவின் கல்வி பங்குதாரர் என்கின்ற முறையில் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு சாலை பொறியியல் ஆய்வை மேற்கொண்டது.
கோயம்புத்தூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாட்ஸ்பாட்டுகளில், சாலை விபத்துகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு சாலை பாதுகாப்பு விதிகளை பரிந்துரைப்பதில் சிறப்பாக பணிபுரிந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சிறந்த சாலை பாதுகாப்பு பங்களிப்புகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலிருந்து கலந்து கொண்ட கல்வி நிறுவனங்களில் இக் கல்லூரி மட்டுமே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஒடிசா அரசின் நீர்வளம், வணிகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் துகுனி சாஹு, எப். ஐ. சி .சி ஐ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றத்தின் தலைவர் எம் .பி ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கல்லூரியின் பேராசிரியர் ஹேமா, சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்கள் ராகுல் பிரசாத் , தக்ஷின், சுமன் ஆகியோருக்கு விருது வழங்கினர். மதியம் நடைபெற்ற சாலை பாதுகாப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு குறித்த மாநாட்டில் பேராசிரியர் ஹேமா சாலை பாதுகாப்பினில் பின்பற்றும் விதிகள்களில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
விருது பெற்றவர்களை எஸ். என். ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர். அலமேலு, சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் முனைவர் சரோஜினி ஆகியோர் பாராட்டினர்.



