fbpx
Homeதலையங்கம்நிவாரண உதவி வழங்க வேண்டும்

நிவாரண உதவி வழங்க வேண்டும்

சரக்கு, சேவை வரி வசூலில் சாதனை என்றால் உற்பத்தி பெருகுகிறது. வர்த்தக நிலை சீரடைகிறது. மக்களின் வாங்கும் சக்தி ஓரளவு அதிகரிக்கிறது என்று பொருள்.

ஆனால் மார்ச் மாதம் முடிய நடப்பு நிதியாண்டில் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நிலையில் இந்த வசூல் கூடியிருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இது மார்ச் மாதம் வரை உள்ள விற்பனை, விநியோகம், உற்பத்தி ஆகியவற்றால் கிடைத்த வருமானம்.

ஆனால் ஏப்ரல் மாதம் முதல் கொரோனாவின் 2வது அலை. முதல் அலையை விட அதிகமாக கோரத்தாண்டவம் ஆடும்நிலையில் பழையபடி ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் வேகமாக பாய்கின்றன.

தமிழ்நாட்டில் கூட இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது காய்கறிகள், மளிகை கடைகள் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும். மற்றகடைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வேலைவாய்ப்புகள் குறிப்பாக உடல் உழைப்புக்கான வேலைவாய்ப்புகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகும்.

நாடு முழுவதும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் எடுத்த கணிப்பின் படி, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7.4 சதவீதமாக உயர்ந்து விட்டது.

இது 8 சதவீதமாக உயரும் அபாயம் இருக்கிறது. இப்போது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் 1 கோடி பேருக்கு மேல் வேலை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவு பேருக்கு வரும் மாதங்களில் வேலையிழப்பு ஏற்படுமோ? தெரியவில்லை.
எனவே வரும் காலங்களில் மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகைகளை அதிகரிக்க வேண்டும். அரசு திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் சற்று அதிக வேலைவாய்ப்புகளை மக்களுக்கு அளிக்க முடியும்.

நூறு நாள் வேலை திட்டத்துக்கு இன்னும் அதிகளவில் பணம் ஒதுக்கீடு செய்யவேண்டும்.

நிவாரண உதவியாக ஏற்கனவே வழங்கியது போல இப்போதும் நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய முறைசாரா வர்த்தகங்கள் தழைக்க எல்லாவிதமான கடன் நிதியுதவிகளையும் வழங்க வேண்டும்.

இன்று முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், தான் பதவியேற்றவுடன் முதல் ஆணையாக கொரோனா தொற்றுக்காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.4000 வழங்கப்படும்.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது நிச்சயமாக மிக உதவியாக இருக்கும்.

மு.க.ஸ்டாலினை போல மத்திய அரசாங்கமும் இந்த இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அல்லல்படும் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதே இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img