fbpx
Homeபிற செய்திகள்2747 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.81 கோடி நலத்திட்ட உதவி

2747 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.81 கோடி நலத்திட்ட உதவி

நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் 15.6.2022 வரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்டம் முழுவதும் 2747 பயனாளிகளுக்கு ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் நலனை பேணிக்காத்திட முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வாழ்விற்காக தனித்துறையினை உருவாக்கினார்.

தொழுநோய் இரவலர் மறுவாழ்வுத்திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், மாத ஓய்வூதிய திட்டம், பராமரிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அரசுப் பேருந்தில் இலவச பயணச்சலுகை, கல்வி உதவித்தொகை, கல்லூரிகளில் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கியது மட்டுமின்றி, அவர்கள் மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லினையும் உருவாக்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின் 7.5.2021 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

முதல்வர் மாற்றுத்திறனாளிகள் மீது மிகவும் அக்கறை கொண்ட காரணத்தினால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் 15.6.2022 வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1598 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 814 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.8.20 இலட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளியை பராமரிக்கும் பாதுகாவலர்களுக்கு கூடுதல் பராமரிப்பு உதவித்தொகை ஒரு பயனாளிக்கு தலா ரூ.1000/- வீதம் 39 பயனாளிகளுக்கு ரூ.4.68 இலட்சம் மதிப்பிலும்,

0 முதல் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் கல்வி கற்பதற்கு 2 குழந்தைகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித்தொகையும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 122 பயனாளிகளுக்கு ரூ.4.22 இலட்சம் மதிப்பிலும், சுய தொழில் புரிய வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.4.13 இலட்சம் மதிப்பிலும், நாள்பட்ட நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட 22 நபர்களுக்கு ரூ.3.96 இலட்சம் மதிப்பிலும், 0 முதல் 6 வயது வரை உள்ள செவித்திறன் குன்றியோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் கல்வி கற்பதற்கு 16 குழந்தைகளுக்கு ரூ.2.52 இலட்சம் மதிப்பிலும்,
பட்டதாரி மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரமும், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லம் 34 பயனாளிகளுக்கு ரூ.8.26 இலட்சம் மதிப்பிலும்,
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ..41 ஆயிரம் மதிப்பிலும், மனவளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் பயில 25 பயனாளிகளுக்கு ரூ.3.78 இலட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சமும், 4 பயனாளிகளுக்கு ரூ.42 ஆயிரம் மதிப்பில் செல்போன், 4 பயனாளிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2747 பயனாளிகளுக்கு ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

“தனியாகச் செல்ல
கிடைத்தது ஸ்கூட்டர்”
பயனடைந்த மாற்றுத்திறனாளி பிரிடா ஜாஸ்மின் கூறியதாவது:
என் கணவர் பெயர் வசந்தகுமார். நாங்கள் உதகை தாவணெ இந்திரா நகரில் வசித்து வருகிறோம். எனக்கு இருகால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. பிறர் உதவியுடன் அன்றாட வேலைகளை செய்து வந்தேன்.

இந்நிலையில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் பழங்குடியி னர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இம்மையத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தேன்.

முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் ஸ்கூட்டர் எனக்கு வழங்கப்பட்டது. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்போது என்னால் தனியாக வெளியில் சென்று என்னுடைய வேலைகளை சுயமாக செய்ய முடிகிறது. என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பயனடைந்த மாற்றுத்திறனாளி ஜெயலட்சுமி கூறியதாவது:
கூடலூர் வட்டம் சின்ன சூண்டி பகுதியில் வசித்து வருகிறேன். மகன் மனவளர்ச்சி குன்றியவர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். போதுமான வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு இருந்தோம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிக்கான முகாம் கூடலூரில் நடைபெற்றது. குடும்பத்தின் சூழ்நிலை கருதி எனக்கு இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பித்தேன். முன்னுரிமை அடிப்படையில் இலவச தையல் இயந்திரம் முகாமில் வழங்கப்பட்டது.

இலவச தையல் இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.100 அல்லது ரூ.150 வரை வருமானம் ஈட்டுகிறேன். அன்றாட குடும்ப செலவு செய்ய தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச தையல் இயந்திரம் பெரும் உதவியாக இருந்தது.

என் மகனை போன்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வருக்கு எனது சார்பாகவும், குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img