கோவை தெற்கு சட் டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் புதிய கோரிக்கைகள் குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடை பிரச்சினை, முதியோர் உதவி தொகை கிடைக்க பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்க பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்துள்ளேன்.
பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சம்பளப் பணம் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் கிடைக்கப் பெறும்படி செய்துள்ளோம்.
இத்திட்டத்தை விவசாய மக்களோடு இணைந்து செயல்பட வேண்டும் இத்திட்டத்தினால் முழுமையாக பயன் இல்லை என கூறிவிட முடியாது. இதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசு ஆராயும்.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் எட்டு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “அம்மாநிலத்தின் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். பாரபட்சமற்ற நடவடிக்கைகள் இருக்கும்.
இந்த விவகாரத்தில் உ.பி.,யில் தேர்தல் வருகின்ற காரணமாக செத்துப் போன காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க அதுமுயற்சி செய்கிறது. உயிரற்ற உடலை வைத்து அரசியல் செய்வது வேதனையான விஷயம்.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலை அம்மாநில அரசிற்கு உள்ளது.
கலவரம் ஏற்படும் சூழலில் பிரியங்கா காந்தி அங்கு செல்கிறார் என்றால் அங்கு சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுக்கு உள்ளதால் சூழலின் தன்மையைக் கருதியே அவர் அனுமதிக்கபடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



