கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் “மனசு ரொம்ப வலிக்குது” என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது.
இதனால், வலிமை ‘அப்டேட்’ வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் ‘டிரெண்ட்’ செய்து வந்தனர். வலிமை அப்டேட் என்ற வார்த்தையை வைத்து அரசியல் தலைவர்களும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த வார்த்தை பிரபலமானது.
ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதனிடையே கோவை ரயில் நிலையம் அருகே அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் வேதனையுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



