fbpx
Homeபிற செய்திகள்வடகிழக்கு பருவ மழை காலத்தில் கோவையில் காட்டு யானைகள், மனிதர்கள் மோதல் அதிகரிப்பு - ஆய்வில்...

வடகிழக்கு பருவ மழை காலத்தில் கோவையில் காட்டு யானைகள், மனிதர்கள் மோதல் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

கேரள எல்லையில் உள்ள நீலம்பூர் யானை ரிசர்வ் பகுதியிலிருந்து, யானைகள் இடம்பெயரும் காலமான வடகிழக்கு பருவ மழை காலத்தில் தான், கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் காட்டு யானை மோதல் பெரும்பாலும் நடப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோவை-நீலம்பூர் பகுதியில் இடப்பெயர்வுக்காக காட்டு யானைகள் பயன்படுத்தும் பாதைகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதற்காக கோவை வனத்துறையைச் சேர்ந்த யானைகள் பற்றி நிபுணத்துவம் பெற்ற டாக்டர் என்.சிவகணேசன் ஈடுபட்டிருந்தார்.

கோவை வனப்பகுதியில், யானை போக்குவரத்து பாதைகளை அடையாளம் காண்பது, யானைகளின் பருவகால இடம்பெயர்வு பாதைகளின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது, யானை களின் போக்குவரத்து பாதைகளை எந்தவொரு இடையூறும் இல்லாமல் வைத்திருக்க தேவையான நடவடிக்கை களை அடைய £ளம் காண்பது ஆகியவை இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.

இடப் பெயர்வுக்காக யானைகளுக்கு பாதுகாப்பான பாதைகளை அடையாளம் காண்பது, அவற்றை பாதுகாப்பது, யானைகள் அடிக்கடி வரும் வனத்தைச் சாராத பகுதிகளை இனம் காண்பதும், யானைகள்-மனிதர்கள் மோதல் போன்றவை நிகழாமல் இருக்க தேவையான வழிமுறைகள் ஆராயப்பட்டன.

பிரம்மகிரி,நீலகிரி-கிழக்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்ட நீலம்பூர்-கோவை யானைகள் நடமாட்டம் பகுதியில் காணப்படும் யானைகளின் பாலினம், வயது போன்ற தகவல்களை சேகரிக்க இந்த ஆய்வு உதவி புரியும்.

யானைகளின் வாழ்விடங்கள் அருகே வனப்பாதைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், உள்ளூர் கிராமவாசிகள், கேரள, தமிழக வனத்துறையில் பல பிரிவுகளில் பணிபுரியும் கள ஊழியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி யானைகளின் நடமாட்டம் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கு இடையேயான மன்னார்காடு, கோவை வனத்துறை ஊழியர்களுடன் யானைகளின் நடமாட்டம் குறித்த உண்மை நிலை அறிய கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், நீலம்பூர் -கோயம்புத்தூர் யானை காப்பகத்திற்குள், யானை இடம்பெயரும் 18 வலசைப் பாதைகள் அடையாளம் காணப்பட்டன.

மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வன எல்லைகளில் யானைகள் கடக்க மலையடிவாரங்களில் போதிய நிலப்பரப்புகள் உள்ளன.

செங்குத்தான பாதைகள் இல்லாமல் சரிவுகள் அதிகம் இல்லாத பகுதிகளையே யானைகள் பயன்படுத்துவது தெரியவந்தது.

பெரும்பாலான இடம்பெயர்வு பாதைகள் தற்போதைய நெடுஞ்சாலைகளின் குறுக்கே சென்றாலும், பருவ காலங்களில் யானைகள் தங்களது இலக்குகளை நோக்கிச் செல்லும்போது, இந்தப் பாதைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதில்லை.

யானைகள் கூட்டம் புலம் பெயர அதிக முக்கியத்துவம் கொடுப்பது வனப்பகுதிகளில் கிடைக்கும் வற்றாத நீர் ஆதாரங்கள் தான். இதை முன்னிறுத்தியே அவை தங்களது வலசைப் பாதைகளை அமைத்துக் கொள்கின்றன.

பொதுவாக வாளையாறு- பாலக்காடு இடையே இடம்பெயரும் யானைகள், நீர் ஆதாரங்கள் கிடைக்கும் போது வனத்தையொட்டிய நிலப்பரப்பு, ஆற்றுப் படுகைகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு பவானிசாகர் வரை செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கோவை வனத்துறை எல்லைக்குள் 720 சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படும் யானைகளின் 18 இடம்பெயர்வு பாதைகள், இந்த நிலப்பரப்பில் ஒரு முக்கியமான பாதுகாப்பு பிரிவாக தென்படுகிறது.

எதிர்காலத்தில் மனித-யானைகள் மோதலைத் தவிர்க்க யானைகளின் அனைத்து இடம்பெயர்வு பாதைகளையும் காக்க வேண்டும்.

வனத்துறையின் புதிய கொள்கைகளை அனுசரித்து அனைத்து அரசு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்பதையும் ஆய்வு வலியுறுத்தி உள்ளது.

இந்த முதல் கட்ட ஆய்வு மன்னார்காடு மற்றும் கோவை வனப் பிரிவுகள் இடையிலான யானை நடமாட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டவை.

இது போன்ற ஆய்வு பாலக்காடு-கோவை வனப் பிரிவுகளுக்கு இடையேயான யானை நடமாட்டம் குறித்தும் நடத்தப்படும்.

தற்போது நடத்தப்பட்ட இந்த ஆய்வு மன்னார்காடு வனத்துறையினரிடம் பகிரப்படும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img