தர்மபுரி நகராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு முகாம் 24-வது வார்டு சத்திரம் மேலத் தெருவில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார்.
நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமையொட்டி அந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டது. சாக்கடை கால்வாய்களில் உள்ள அடைப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
மேலும் சாக்கடை கால்வாயின் மீது உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. முகாமில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு,நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமண சரண், சீனிவாசலு மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையாளர் கூறுகையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் அடுத்தடுத்து ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு முகாம் நடைபெறும்.
நகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.



