கோவையில் பள்ளி வளாகத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய மாணவர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மைதானத்தில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக மேல் நிலைத்தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மைதானத்தை ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி அமைக்க பள்ளி மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், நேற்று பள்ளி வளாகத்திற்கு சென்ற மாணவர்கள், திடீரென அங்கிருந்த மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மைதானத்தில் தொட்டி அமைத்தால், மாணவர்கள் விளையாட இடம் இருக்காது என்றும், எதிர்ப்பை மீறி தொட்டி அமைத்தால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்கள் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் கூட்டம் கூடி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



