முதியோர் இல்லங்களில் வசிக்கும் தாய்மார்களின் தற்போதைய வாழ்க்கை முறையை மேம்படுத்தி அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக ‘மகாராணி’ என்னும் திட்டத்தை கோவையில் மோகன் நாயர் துவக்கி உள்ளார்.
‘மகாராணி’ என்னும் திட்டம் உருவாக காரணமாக இருந்தவர் மோகன் நாயர் ஆவார். அவர் மும்பையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரபலமான டைமண்ட் ஷோரூம் ஒன்றில் விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை துவக்கினார்.
‘மகாராணி’ என்பது மோகன் நாயரின் கனவு திட்டம். ஆனால் தற்போது நனவாகி உள்ளது. இது குறித்து மோகன் கூறுகையில்,
முதியோரின் தேவைகளை கவனித்துக் கொள்ள பல்வேறு அறக்கட்டளைகள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து பொழுதை கழிப்பதற்கான நேரம் பலருக்கு இல்லை. அவர்களின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு, செய்ய விரும்பும் அல்லது கனவு கண்ட விஷயங்களைச் செய்து, தற்போதைய வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பினோம்.
அதன் விளைவாக உருவானதே ‘மகாராணி’ திட்டம். இதில் மோகன் நாயர், அவரின் நண்பர்களுடன் சேர்த்து 15 முதல் 20 உறுப்பினர்கள் உள்ளனர். பல்வேறு தளங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
இந்த வெற்றி பயணத்திற் கான முதல் நிகழ்ச்சி கோவையில் துவங்கு கிறது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான தாய்மார்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.
‘மகாராணி’ நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகும்.
அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட உணவை சாப்பிட விரும்புகிறவர்களுக்கும், குறிப்பிட்ட வழிபாட்டுத் தலம் அல்லது புனித இடத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கும், தாங்கள் முன்னர் வசித்த வீடு அல்லது அவர்கள் வேலை பார்த்த இடங்களுக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கும், அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் முதியோர் இல்ல நிர்வாகக் குழுவினரின் ஆதரவுடன் முடிந்ததைச் செய்வோம் என்றார்.



