fbpx
Homeதலையங்கம்பிரதமருக்கு முதல்வரின் கோரிக்கை

பிரதமருக்கு முதல்வரின் கோரிக்கை

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய பொதுமுடக் கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு நிறுவனங்களுக்கும் வாகன கடன் வாங்கியோருக்கும் கடந்த ஆண்டைப்போல ஆறுமாத காலத்துக்கு கடன் தவணைகளை நீட்டிக்கவும் இடைப்பட்ட காலத்திற்கான வட்டியிலிருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தார். தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியா முழுவதிற்கும் பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனை இது.
உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் கொரோனா தடுப்பூசிக்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தி முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் எழுதியுள்ள சமீபத்திய கடிதத்தில் ஸ்டாலினும் கையெழுத்திட்டுள்ளார்.
மாநில உரிமைகள் சார்ந்த தேசிய அளவிலான உரையாடலில் தொடர்ந்து அவர் உத்வேகத்துடன் பங்கேற்று வருகிறார். 2020 அக்டோபரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு ஒன்றிய அரசு முன்மொழிந்த வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் அந்த நிதி உதவியை செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமையே என்று வாதிட்ட 10 முதல்வர்களுக்கு தனது ஆதரவை கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்தியிருந்தார், ஸ்டாலின்.
தொற்று பரவல் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தமது கட்சி துணை நிற்கும் என்ற உறுதி மொழியையும் ஸ்டாலின் அளித்திருந்தார். இப்போது முதல்வராக அவர் முன்னெடுக்கும் மாநில நலன்களுக்கான குர லுக்கு எதிர்க்கட்சியும் கருத்தொருமித்த நிலையில் அத்தகைய ஆதரவை அளிக்க வேண்டியது அவசியம்.

படிக்க வேண்டும்

spot_img