தடுப்பூசிகளால் பக்க விளைவுகள், தடுப் பூசிகள் குறித்த வதந்தி காரணமாக பலர் அவற்றை போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. மேலும் வலைத் தளங்களில் பரவிய பல்வேறு சம்பவங்களை கேள்விபட்டு தடுப்பூசி ஆபத்தை விளைவிக்குமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் தடுப்பூசி போடுவதை தள்ளிப்போட்டனர்.
தற்போது 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் முதியவர்களும் கிராம மக்களும் தடுப்பூசி போட்டிருந்தால் தப்பித்திருக்கலாமே என்ற மன நிலையிலும் உள்ளனர்.
கொரோனா உச்சகட்ட அலையில் மேலை நாடுகள் ஓரளவுக்கு தப்பிக்க அங்கு ஏற்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளும், அனைவருக்கும் தடுப்பூசி திட்டமும் உதவின. ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அனைவருக்கும் தடுப்பூசி என்பதை நிறைவேற்றிட சில மாதங்கள் சென்றாக வேண்டும்.
இந்நிலையில் தடுப்பூசிகள் தட்டுப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு சிச்கலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டும் தமிழக அரசு தற்போது கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்திட உலகளாவிய டெண்டரை முன்னெடுத்துள்ளது. அரசின் இத்தகைய நல்முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்தாக வேண்டும்.
குறிப்பாக கிராமங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு ஆதார் போன்றவை கட்டாயமில்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு பணியில் அரசோடு ஒருங்கிணைந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்.