தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டைடில் பார்க்கில் அமைக்கப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டல கட்டிட பணிகளை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சர் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கோவைக்கு வந்து உள்ளேன்.
இன்றைய ஆய்வில் என்னுடன் தகவல் தொழில் நுட்ப முதன்மை செயலாளரும் வந்து உள்ளார்.
ரூ.114 கோடி மதிப்பீட்டில் கோவை இரண்டாவது எல்காட் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு ஆய்வு மேற்கொண்டு விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில் நுட்ப பூங்காவை அமைத்து சிறப்பாக செயல்படுத்த உள்ளோம்.
இந்த துறையின் மூலமாக இளைஞருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். தென் மாவட்டங்களில் மிக குறைவாக தொழில் வாய்ப்பு உள்ளது அதனால் இளைஞர்கள் சென்னை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
அதனைத் தடுக்க தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் நீரஜ் மித்தல், ஆகியோர் உடனிருந்தனர்.



