fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட விவசாயிகளிடம் பொங்கல் கரும்பு நேரடி கொள்முதல்- செய்தியாளர்கள் பயணத்தில் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு

சேலம் மாவட்ட விவசாயிகளிடம் பொங்கல் கரும்பு நேரடி கொள்முதல்- செய்தியாளர்கள் பயணத்தில் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக உரிய விலை கொடுத்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் இடங்களில் ஒன்றான எடப்பாடி வட்டம், பூலாம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் நேற்று (6ம் தேதி) செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொங்கல் பரிசுத்தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000/- ரொக்கத்துடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது குறித்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு என மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு முழுக் கரும்பு வழங்கிடும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கென வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டு கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தரமான கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

வருகின்ற 09.01.2023 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்குத் தேவையான கரும்புகள் அனைத்தும் நமது மாவட்டத்தி லிருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தேவையான கரும்புகளையும் இங்கிருந்து தொடர்புடைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

மேலும், கரும்பு கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகக் கரும்பிற்கு உரிய தொகை வழங்கப்படுகின்றது. முன் எப்பொழுதும் இல்லாத அளவில் கரும்பிற்கு அதிக விலை வழங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது கரும்புகளை வழங்குகின்றனர்.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத் தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு இடைத்தரகர்களின்றி அரசால் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, கரும்பிற்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தப்படுவது குறித்து சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி திரு. பாரதிராஜா அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு வழங்கப்படும் கரும்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆணையிட்டுள்ளார்கள். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் கரும்புகளுக்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவில் அதிக விலை வழங்கப்படுவதால் நாங்கள் மகிழ்ச்சியுடன் கரும்புகளை வழங்குகின்றோம்.

மேலும், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகக் கரும்பிற்கு உரிய தொகை வழங்கப்படுகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இத்தகைய அறிவிப்பால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி வட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி பாரதிராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு இடைத்தரகர்களின்றி அரசால் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, கரும்பிற்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தப்படுவது குறித்து சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி திரு.சுப்ரமணி அவர்கள் தெரிவித்ததாவது:

கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பினால் கரும்பு தலா 5 முதல் 10 ரூபாய் தான் எங்களுக்கு கிடைக்கும். தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை கரும்புடன் சேர்த்து வழங்க உத்தரவிட்டு அலுவலர்கள் குழு மூலம் எங்களிடம் நேரிடையாக கொள்முதல் செய்வதால் எங்களுக்கு பன்மடங்கு இலாபம் கிடைக்கிறது. நாங்களும் மிக்க மகிழ்ச்சியுடன் எங்களது கரும்புகளை வழங்குகின்றோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இச்சிறப்பான அறிவிப்பால் என்னைப்போன்ற கரும்பு விவசாயிகளும், கரும்புடன் பொங்கல் பரிசுத்தொகுப்பைப் பெறும் பொதுமக்களும் மிக்க மகிழ்ச்சியுடன் இப்பொங்கல் திருநாளை கொண்டாடுவோம். இவ்வாறு சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி திரு.சுப்ரமணி அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணை கூடுதல் பதிவாளர் ஏ.கே. சிவமலர், கூட்டுறவுச் சங்க இணை பதிவாளர் ப.இரவிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) சிங்காரம், பூலாம்பட்டி பேரூராட்சித்தலைவர் அழகுதுரை, வட்டாட்சியர் லெனின் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img