ஈரோடு, நம்பியூர், பொலவபாளையம் கிராமத்தில் வசிக்கும் பழனிசாமி, ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் ஐங்கரன் (47). இவர் கடந்த 31ம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மகன் ஐங்கரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
சிறுநீரகங்கள்,கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிசாமி ஐங்கரன் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.



