பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குராளா ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பணிகள்
அதனடிப்படையில் பெரியநாயக் கன்பாளையத்திற்கு வருகை தந்த சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குராளா குப்பிச்சிபாளையத்தில் உள்ள ஹவுசிங் யூனிட் வளாகத்தில் செயல்படும் வளமீட்பு பூங்காவில் இங்கு இயற்கை உரம் தயாரித்தல்,மண் புழு உரம்,பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் உயிரி கழிவுகள் மறுசுழற்சியின் மூலம் வேளாண்மை பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் ஜி.கே.டி பள்ளி அருகே உள்ள குப்பைக் கிடங்கைப் பார்வையிட்ட அவர் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பிலாத வகையில் மக்காத குப்பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
பேரூராட்சி தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் செயல் அலுவலர் சு.நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் பேரூராட்சியின் மற்ற பகுதிகளில் மேற் கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கினர்.
அப்போது கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.துவராகநாத்சிங்,இளநிலை பொறியாளர் கே.வெங்கடாசலபதி செயல் அலுவலர் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் லலிதாமணி, தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



