ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்ற 1962-ம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சி கந்தெர்பால் தொகுதியில் தான் வென்றது. 1967, 1972-ல் காங்கிரஸ் தொடர்ந்து வென்றது.
ஆனால் 1977, 1983, 1987, 1996 ஆகிய தேர்தல்களில் உமர் அப்துல்லாவின் தாத்தா காஷ்மீர் சிங்கம் என அழைக்கப்பட்ட ஷேக் முகமது அப்துல்லா, உமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா வெற்றி பெற்று ‘அப்துல்லா’ கோட்டையாக வைத்திருந்தனர்.
2002-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி இத்தொகுதியில் வென்றது. 2008-ம் ஆண்டு உமர் அப்துல்லா முதல் முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போதுதான் ஜம்மு காஷ்மீர் முதல்வரானார் உமர் அப்துல்லா. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் தேசிய மாநாட்டுக் கட்சிதான் இங்கு வென்றது.
இதனால்தான் இந்த தொகுதியை ஜம்மு காஷ்மீரின் “அமேதி” என அழைக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் எப்படி இந்திரா காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறதோ அதேபோல அப்துல்லா குடும்பத்தின் கோட்டையாகவே கந்தெர்பால் தொகுதி இருக்கிறது.
தற்போது நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுவதால் பெரும் கவனம் பெற்றுள்ளது. உமர் அப்துல்லாவை எதிர்த்து மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பஷீர் மிர் போட்டியிடுகிறார்.
2014-ம் ஆண்டு தேர்தலில் கங்கன் தொகுதியில் போட்டியிட்ட பஷீர் மிர், தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் மியான் அல்தாப்புக்கு கடும் போட்டியை உருவாக்கியவர்.
அத்துடன் 2014-ம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளராக இந்த தொகுதியில் வென்ற இஷ்பாக் ஜப்பார் இம்முறை கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சையாக போட்டியிடுகிறார். தேசிய மாநாட்டுக் கட்சியின் வாக்குகளை ஜப்பார் சிதறடிக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது. மேலும் காஷ்மீர் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஷேக் ஆசிக்கும் களம் காண்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள பொறியாளர் ரஷீத் கட்சியின் வேட்பாளராக ஷேக் ஆசிக் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் உமர் அப்துல்லாவை சுயேட்சையாகப் போட்டியிட்டு தோற்கடித்தவர்தான் ரஷீத். இதையெல்லாம் தாண்டி சிறையில் உள்ள பயங்கரவாதி பர்காதியும் இத்தொகுதியில்தான் போட்டியிடுகிறார்.
கடந்த காலங்களைப் போல அப்துல்லா குடும்பம் கந்தெர்பால் தொகுதியில் அவ்வளவு எளிதாக வெல்ல முடியுமா? இத்தனை சவால்களையும் தாண்டி உமர் அப்துல்லா வெல்வாரா? தாத்தா காலத்து கோட்டையில் வெற்றிக் கொடியை பேரன் உமர் அப்துல்லா பறக்கவிடுவாரா? என்பது அக்டோபர் 8-ந் தேதி தெரிந்துவிடும்!