fbpx
Homeபிற செய்திகள்‘100% மாணவ, மாணவிகள் வாக்களித்தால் ராஜ்பவனுக்கு அழைத்து கவுரவிப்பேன்’

‘100% மாணவ, மாணவிகள் வாக்களித்தால் ராஜ்பவனுக்கு அழைத்து கவுரவிப்பேன்’

100% மாணவ, மாணவிகள் வாக்களித்தால் ராஜ்பவனுக்கு அழைத்து கவுரவிப்பேன் என்று கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

மாணவர்களின் கனவுகளை நனவாக்க ஓயாத உழைப்பும் திட்டமிடுதலும் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமதிதனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா பல்நோக்கு அரங்கத்தின் திறப்புவிழா நேற்று (8ம் தேதி) மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அரங்கத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: உலகத்தரம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமாகக் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியை முனைவர் மா.ஆறுச்சாமி இளையதலைமுறைக்காக உருவாக்கியுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தக் கல்லூரி தனக்கான ஓர்அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

உழைப்பும் உள்ளார்ந்த அர்ப்பணிப்புமே இதன் வளர்ச்சிக்குக் காரணம். கற்பித்தல் திறனிலும் ஆராய்ச்சி நுட்பத்திலும் சிறந்து விளங்கும் இக்கல்லூரி பொன்விழாவுடன் பவளவிழா, வைரவிழா ஆகியவற்றையும் கொண்டாட வேண்டும்.

ஒரு காலத்தில் நம் நாட்டை உலகநாடுகள் அவ்வளவாகப் போற்றவில்லை என்றும் ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது, பாரதத்தின் கடவுச்சீட்டை இன்று உலகமே மதிக்கிறது.
மிக விரைவில் பாரதம் உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடாக மாறவுள்ளது. நம்பண்பாட்டையும் பழமையையும் திறமையையும் பலநாடுகள் போற்றுகின்றன-.

அத்துடன் மகளிர் மேம்பாட்டுக்காக மத்தியஅரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் மகளிர் தொழில் முனைவோர்களாக வளர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும் துணைசெய்கின்றனர்.

இளைய தலைமுறையான மாணாக்கர்களின் கனவுகள் பெரிதாக இருக்கவேண்டும் என்றும் அந்தக்கனவுகளை நனவாக்க ஓயாத உழைப்பும் திட்டமிடுதலும் தேவை. புதிய பாரதத்தை உருவாக்குவதில் மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. தகுதி உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று ஜனநாயக கடமையாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாகும்.
இக்கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கும் பட்சத்தில் ராஜ்பவனுக்கு அழைத்து கவுர விப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார். முன்னதாக, கல்லூரி மேலாண்மைக்குழுவின் தலைவர் பொறியாளர் ஆர்.சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். விழாவின் நிறைவில் கல்லூரியின் பொருளாளர் மருத்துவர் ஓ.என்.பரமசிவன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img