fbpx
Homeபிற செய்திகள்பழமையான கல்லார் அரசு பழப்பண்ணைக்குள் சுற்றுலா பயணிகள் வருகை தர தடை

பழமையான கல்லார் அரசு பழப்பண்ணைக்குள் சுற்றுலா பயணிகள் வருகை தர தடை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்னுமிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அரசு கல்லார் பழப்பண்ணை. நீலகிரி மலையடிவாரத்தில் நீர் வளமும் மண்வளமும் மிகுத்த இப்பகுதியில் கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது இப்பழப்பண்ணை.

சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக் கலைத்துறைக்கு சொந்தமான இப்பழப்பண்ணையில் ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷ்ண நிலை நிலவுவதால் உலகில் மிக சில இடங்களில் மட்டுமே அரிதாக விளையக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்கள் உள்ளன.

மேலும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்றழைக்கபடும் இலவம் பஞ்சு மரங்கள், காணவும் கிடைக்கவும் அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்கு கொட்டி கிடக்கின்றன.

இப்பண்ணையில் சீசனுக்கு ஏற்ற வகையில் விளையும் அரிய வகை பழங்கள் விற்பனை, மர மற்றும் மலர் நாற்றுக்கள் விற்பனை, பழச்சாறு மற்றும் ஜாம் விற்பனை, குழந்தைகள் விளையாட சிறிய அளவில் பூங்கா என பல்வேறு வசதிகள் உள்ளதால் விடுமறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தே காணப்படும்.

இந்நிலையில், யானைகளின் வழித்தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து கண்டிப்பான நடவடிக்கை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் யானை வலசைப் பாதையில் உள்ள 123 ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட கல்லார் பழப்பண்ணையை வனத் துறையினரிடம் ஒப்படைக்க உத்திரவிடப்பட்டது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது கல்லார் பழப்பண்ணைக்குள்ள சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதித்து அதற்கான அறிவிப்பு தோட்டக்கலைத்துறையால் வைக் கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கம் போல் அரசு பழப்பண்ணைக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்போது பொதுமக்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது..
ஆனால் மர நாற்றுக்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விற்பனை வழக்கம் போல் நடைபெறும்“ என்றனர்.

மேட்டுப்பாளையம் பகுதியின் ஒரு அடையாளமாக 123 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பண்ணை முடக்கப்படுவது கவலை தரக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img