கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த முத்துநகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் இன மக்கள் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் நிலையில் மின்சார வசதி வேண்டி அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது தனிநபர் ஒருவர் இது தனக்கு சொந்தமான இடம் என்றும் எனவே இவர்களுக்கு எந்த வசதிகளும் செய்து தரக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மின்சார வசதி செய்து தரப்பட்டது.
இந்த நிலையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் பட்டா வேண்டி அம்மக்கள் மனு தாக்கல் செய்த நிலையில் எதிர் தரப்பினரும் ஒப்புக்கொண்டதை அடுத்து பட்டா வழங்க உத்தரவிட ப்பட்டது. உத்தரவிடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் அந்த இடத்தை அதிகாரிகள் அளந்து தராததால் வீடு கட்ட முடியாமல் தற்காலிகமாக கூரைகள் மற்றும் சிமெண்ட் ஷீட் அமைத்து மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் பாம்பு, பூரான் போன்ற விஷ பூச்சிகள் அதிகமாக வீடுகளுக்குள் வருவதாகவும் தெரிவித்துள்ள அம்மக்கள் உடனடியாக தங்களுக்கு அந்த இடத்தை அளந்து கொடுத்தால் பட்டா கிடைத்துவிடும். எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.