ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட் பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கே.இ.பிரகாஷ் நேற்று மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, வேட்பாளர் கே.இ.பிரகாஷ் மக்களிடத்தில் பேசியதாவது: தமிழ்நாட்டில் திமுக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.15 கோடி பேருக்கு மாதம் ரூ.1,000ம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதல் திட்டமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு பஸ்களில் விலையில்லா(விடியல் பயணம்) பயண திட்டத்தை அமல்படுத்தினார்.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க புதுமைப்பெண் திட்டம் செயல் படுத்தி, 2.72 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கிற்கே ரூ.1,000ம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு வழங்கப்பட்டதை போலவே அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் விரைவில் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதம் ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சமையல் கேஸ் சிலிண்டர் விலை பாதியாக குறைக்கப்படும். பெட்ரோல்-டீசல் விலை ரூ.65 முதல் ரூ.75 ஆக குறைக்கப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின்போது, திமுக தெற்கு மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான பி.கே.பழனிசாமி, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.