fbpx
Homeபிற செய்திகள்உயர்ந்த 1 கோடி வாக்குகளும் தேர்தல் ஆணைய மவுனமும்!

உயர்ந்த 1 கோடி வாக்குகளும் தேர்தல் ஆணைய மவுனமும்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 5வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

பல மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலின் போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேவேளையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிலும் நன்பகத்தன்மை இல்லை என விமர்சிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டதிலும் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக முதல் கட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தபின்னர் வாக்குப்பதிவு சதவீதங்களை உடனடியாக வெளியிடாமல் இழுத்தடித்த தேர்தல் ஆணையம், முதலில் ஒரு புள்ளிவிரத்தையும், பின்னர் ஒரு புள்ளிவிரத்தையும் வெளியிட்டது.

அதன்படி திரிபுரா மாநிலத்தில் 100 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை எழுதியது.

சமீபத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய சதவீத கணக்குகளின் படி வாக்களித்தவர்கள் எண்ணிக்கை திடீரென்று ஒரு கோடி உயர்ந்துள்ளது. நான்கு கட்ட வாக்கு பதவியின் போது தேர்தல் ஆணையம் முதலில் 65.4% வாக்குகள் பதிவானதாக தெரிவித்தது. பின்னர் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி 66.9% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் கணக்குகளின் படி பார்க்கும்போது 1.07 கோடி வாக்குகள் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது சராசரியாக தொகுதிக்கு 28,000 வாக்குகள் உயர்ந்துள்ளது.

இதனை ஆய்வு செய்ததில் முதற்கட்ட வாக்குப் பதிவில் 18 லட்சம் வாக்குகளும், இரண்டாம் கட்டத்தில் 32 லட்சம் வாக்குகளும், மூன்றாம் கட்டத்தில் 22 லட்சம் வாக்குகளும், நான்காம் கட்டத்தில் 34 லட்சம் வாக்குகளும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த உடன் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்க வைத்து வருகின்றன. ஆனால் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட மறுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் நான்கு கட்டத் தேர்தலுக்குப் பிறகு வெளியான இந்த வாக்குப்பதிவு அதிகரிப்பு என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாடு முழுவதும் இது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

இதற்கிடையில் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தையும், வாக்களித்தவர்கள் எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதில், தேர்தல் ஆணையம் தனது கருத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாராவது முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்ற யூகங்களுக்கு வானளாவிய அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் இடம் தரலாமா? வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் இனியாவது வெளிட்டு, மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள நியாயமான சந்தேகத்தைத் தீர்க்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது!

படிக்க வேண்டும்

spot_img