fbpx
Homeபிற செய்திகள்திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 2021-22 முதல் இதுவரை ரூ.86.33 கோடி மானியம் பெற்ற 90,064...

திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 2021-22 முதல் இதுவரை ரூ.86.33 கோடி மானியம் பெற்ற 90,064 விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி அறிவுறுத்தலின்பேரில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜோ.பெருமாள்சாமி மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியாகும் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களான பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்கள் ஆகியன சுமார் 1,08,244 எக்டர் பரப்பில் சாகுபடியாகிறது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மாநில அளவில் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 500 டன் காய்கறிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

தோட்டக்கலைப் பயிர்களான கொய்யா, சப்போட்டா மற்றும் கண்வலிகிழங்கு சாகுபடி பரப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதன்மை இடம் வகிக்கிறது. ஆண்டுக்கு ரூ.150 கோடி மதிப்பிலான 750 டன் கண்வலி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

மா மற்றும் திராட்சை சாகுபடி பரப்பில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடம் வகிக்கிறது. புவிசார் குறியீடு பெறப்பெற்ற மலைவாழைகளான விருப்பாச்சி மற்றும் சிறுமலை வாழைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

மாம்பழக் கூழ் தயாரிப்பு செய்யும் தொழிற்சாலைகள் நத்தம் மற்றும் சாணார்பட்டி வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்றன. கெர்கின் (விஷ வெள்ளரி) பதனிடும் தொழிற்சாலை 7 இடங்களில் இயங்கி வருகிறது. மல்லிகைப்பூவில் இருந்து எடுக்கக்கூடிய வாசனை மெழுகு தயார் செய்யும் தொழிற்சாலைகள் 10 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தோட்டக்கலைப் பயிர்களின் விளைபொருட்களை கெடாமல் சேமித்து வைக்க 15,000 டன் கொள்ளளவு உள்ள குளிர் பதன சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.10.82 கோடி செலவினத்தில் புதிய தோட்டங்கள் அமைத்தல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, பண்ணைக்குட்டை, அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி, உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி இனங்களில் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தில், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் பணிக்கு 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கிடங்கு அமைக்க மானியத்தொகை ரூ.87,500 வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3,000 எக்டர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அறுவடைக்கு பின் மேலாண்மை என்ற பிரிவின் கீழ், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையினை மேம்படுத்தும் வகையில் ரூ.24.25 இலட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பழைய தோட்டம் புதுப்பித்தல், நீர்ப்பாசன வசதி மேம்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, அங்கக வேளாண்மை, மகரந்த சேர்க்கை அதிகரிப்பதற்கான திட்டம்-தேனீ வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதவீதம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு போன்றவை ரூ.3.59 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்நீர்ப்பாசனத் திட்டமானது தமிழக அரசால் தொடர்ந்து செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை நீர்வளம் குறைந்து கொண்டே வரும் இந்த சூழல் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிறு/குறு விவசாயிகளுக்கு (100 சதவீதம் மானியத்தில்) நுண்நீர்ப்பாசன அமைப்புகள் எக்டர் ஒன்றுக்கு ரூ.1,35,855 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டமானது திண்டுக்கல் மாவட்டத்தில் 2500 எக்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-24ஆம் நிதி ஆண்டில் ரூ.46.25 இலட்சம் மானியத்தில் முருங்கை புதிய தோட்டம் அமைத்தல், நிரந்தர பந்தல் அமைப்பு குச்சி பந்தல் அமைத்தல் துல்லியபண்ணைத்திட்டம் போன்ற இனங்களில் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 2023-&24 ஆம் நிதியாண்டில் ரூ66.92 இலட்சம் மானியத்தில் மண்ணில்லா விவசாயம்(ஹைட்ரோ போனிக்ஸ்), செங்குத்து தோட்டம், மாடிதோட்டம் அமைத்தல், பழச்செடித் தொகுப்புகள், நெகிழிக் கூடைகள். காளான் வளர்ப்பு கூடம். குளிரூட்டும் பெட்டி, ஊடு பயிர்சாகுபடியை ஊக்குவித்தல், வெற்றிலையில் ஒருங்கிணைந்த உரம், பூச்சி மேலாண்மை, அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் தோட்டம் அமைத்தல் போன்ற இனங்களில் செயல்படுத்தப்படுகிறது.

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் 2023-24 திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை ரபி பயிர்களான வெங் காயம், மிளகாய், வாழை, கத்திரி மற்றும் வெண்டை பயிர்களுக்கு இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் கீழ், ஒரு எக்டர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் பசு மாடு, ஆடு ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1.20 கோடி இலக்கீடாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும் மண்புழு உரப்படுக்கை மற்றும் பயிற்சி செயல் விளக்கம் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பழனி, ரெட்டியார்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் வேடசந்தூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 60 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.44.64 இலட்சத்தில் பல்லாண்டு தோட்டக்கலைபயிர் பரப்பு விரிவாக்கம், காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் போன்ற இனங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2021-22-ஆம் ஆண்டு முதல் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், வழங்கப்பட்ட மானியத்தின் மூலம், மொத்தம் ரூ.86.33 கோடி மானியம் வழங்கப்பட்டதில் 90,064 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

சிறுமலை, சந்தையூர், கொத்தப்புளி மற்றும் நீலமலைக்கோட்டை அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தரமான நடவுச் செடிகள் குறிப்பாக பழவகைக்கன்றுகள்.

செடிகள் மற்றும் மண்புழு உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் தோட்டக்கலைத்துறை திட்டங்களின் மூலமாகவும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு ஒப்பந்தமாக காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு காய்கறி குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் விவசாயிகளுக்கு பயிற்சி நிறுவனமாக செயல்படுகிறது. இங்கு உயர் தொழில்நுட்பத்தில் பசுமை கூடாரம், நிழல்வலை கூடாரம், நில போர்வை, களைபாய், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற தொழில் நுட்பம் கொண்டு விவசாயிகள் கண்டு கற்று கொள்ளும் அளவில் ஒரு முன்னோடி நிறுவனமாக செயல்படுகிறது.

மேலும் இங்கு ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு கல்லூரியும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற TNHORTNET வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலக அலுவலர்களை 0451 2460522 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, இத்திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்.

இந்த ஆய்வின்போது, தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் பாலகுமணன், வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் முருகேசன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலெக்சாண்டர் உட்பட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img