கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் சார்பாக ‘கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வி பிரிவு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்காக 26 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த பிரிவில் இதுவரை சுமார் 35,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று பட்டம் பெற்றுள்ளனர்.
அவ்வரிசையில் கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்வி பிரிவின் 10 வது பட்டமளிப்பு விழாவானது நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தெக்கலூரில் உள்ள கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாண்டம் நிட்ஸ் ன் மூன்றாவது யூனிட்டில் நடைபெற்றது. இதில் 405 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இப் பட்டமளிப்பு விழாவிற்கு, டெல்லி அரசின் பொதுப்பணி, வணிகவரி மற்றும் குடிநீர் வாரியத்தின் முதன்மை செயலாளர் அன்பரசு, சைமாவின் முன்னாள் தலைவர் ஜி.ராஜ்குமார், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.ஆறுமுகம், இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை துணைத் தலைவர் ஜெ.சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கே.பி.ஆர் குழும தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமையுரை ஆற்றினார்.
முன்னதாக கே.பி.ஆர் மில் நிறுவனங்களின் செயல் இயக்குநர்கள் இ.கே.சக்திவேல் வரவேற்றுப் பேசினார். இறுதியில் சி.ஆர்.ஆனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் கே.பி.ஆர் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இந்த ஆண்டில் மேற்படிப்பு படித்து முடித்த 405 பட்டதாரி மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்களை வழங்கி கௌரவித்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவிற்கு இணையதளத்தின் மூலமாக மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினரும் கே.ஐ.டி.டி மற்றும் கே.ஐ.எஸ்.எஸ் பல்கலைக்கழகங்களின் நிறுவனரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அச்யுதா சமந்தா ஆன்லைன் வழியாக கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் பல்கலைக்கழக அளவில் பி.காம் (சி.ஏ), பி.சி.ஏ., பட பிரிவில் மூன்று மாணவிகள் முதல் இடத்தையும் , பி.பி.ஏ ., பி.சி.ஏ., பி.காம் (சி.ஏ)., பட பிரிவில் மூன்று மாணவிகள் இரண்டாவது இடத்தையும், மூன்று மாணவிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த மாணவிகளுக்கு கடந்த 08.11.2023 அன்று சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டமும், பதக்கங்களும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



