கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு மானியத்துடன் பவர்டில்லர் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விளை நிலங்களில் பண்ணை வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க பவர் டில்லர் இயந்திரம் பெறும்பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தில் பவர் டில்லர் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் மற்றும் இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 20 சதவீதம் மானியம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
கோவை மாவட்ட விவசாய பெருமக்கள் பவர்டில்லர் இயந்திரத்தை மானியமாக பெற்றிட தங்கள் அருகாமையிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



