கோவை மாவட்டம், அரிசி பாளையம் மூலக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி கம்பெனி அருகே இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அவர் அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஆண் குழந்தை கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர்.
அப்போது அக்குழந்தை பிறந்து ஒரு மணி நேரமே இருக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்து குழந்தையை ரோட்டில் வீசி சென்றது யார் என்பது தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



