மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஈக்வஸ்டிரின் எனப்படும் மாணவர்களின் குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாடு துறையின் கீழ் இயங்கும் லாரன்ஸ் சர்வதேச பள்ளியில் 168-வது ஆண்டு விழா மூன்று நாட்களாக நடந்து வருகிறது.

இரண்டாம் நாளான நேற்று மாணவர்களின் குதிரை சாகச நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குதிரைகள் மீது அமர்ந்தும், சவாரியாக சென்றும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டி அசத்தினர்.
குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட சிறிய மாணவ, மாணவிகள் குதிரையின் மீது அமர்ந்தவாறும், நின்றவாறும் பல்வேறு பயிற்சிகளை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
குதிரையின் மேல் அமர்ந்தவாறு புத்தகத்தை படிப்பது, ஜிம்னாஸ்டிக் செய்தது, குறிப்பாக மாணவர்கள் ஆடை அலங்காரம் மற்றும் மாறுவேட போட்டியில் கலந்துகொண்டு குதிரை மீது அமர்ந்து சாகசம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
அதேபோல 15 வயதுக்கு மேலான மாணவர்கள் குதிரை சவாரியாக சென்று மைதானத்தில் வைக்கபட்டிருந்த உயரமான தடைகளை தாண்டி வருவது, தரையில் உள்ள பொருட்களை ஈட்டி மற்றும் வாள் ஆகியவற்றின் மூலம் குத்தி எடுப்பது, குதிரை சவாரி செய்து கொண்டே மாணவர்களின் தலை மீது இருந்த வெள்ளிரிகாயை வெட்டுவது போன்ற சாகசங்களையும் செய்து காண்பித்தனர். அவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். குறிப்பாக பெண்கள் ஆண்களுக்கு இணையாக சாகசங்களை செய்து அசத்தினர்.

இத்தகைய குதிரை பயிற்சி செய்வதன் மூலம் தேசிய மற்றும் உலகளவில் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு ராணுவ பணிகளில் சேரவும் மிகவும் உதவியாக இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற குதிரை சாகசங்கள் பள்ளி பருவத்திலேயே கற்றுத் தருவதால் ராணுவம் உள்ளிட்ட உயர் பதவிக்கு பெண்கள் செல்ல எதுவாக இருப்பதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று நடக்கும் நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொள்கிறார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் சாதனைப்படைத்த மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்க ளும் வழங்குகிறார்.
இறுதியாக இசைக் குழு மாணவர்கள் ஒன்றிணைந்து செய்த வாத்திய இசை நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில், உலகின் பல நாடுகளில் இருந்து பெற்றோரும் முன்னாள் மாணவர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் டிவிஎஸ் ராவ் செய்திருந்தார்.



