கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 14ம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 14ம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிமோவா வளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினராக ராமலிங்கம் நிறுவனங்கள் மற்றும் காங்கேயம் கல்வி குழுமங்களின் தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.

கவுரவ அழைப்பாளர்களாக புல் இந்தியா நிறுவனங்களின் இயக்குனர் பார்த்திபன், சானி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை அதிகாரி ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடும்ப விழாவாக நடைபெற்ற இதில் எர்த் மூவர் நலச்சங்க உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து பொங்கல் பண்டிகை விழா கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து சங்க கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் கல்வி உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு எர்த் மூவர் நலச்சங்க உறுப்பினர்களின் குடும்ப நலன் கருதி குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளர்கள், நீர் நிலைகளின் பாதுகாப்பு கருதி அண்மையில் கவுசிகா நதி இலவசமாக தூர்வாரப்பட்டு சுத்தம் செய்துள்ளதாகவும், எதிர் காலத்தில் இது போன்று சமுதாய நல பணிகளில் எர்த் மூவர் நலச் சங்கம் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் சசிக்குமார், காமராஜ், ரவிச்சந்திரன், பாலசுப்ரமணியம், சுரேஷ், பரமேஷ்வரன், தீபன், லோகேஷ், நவீன், பிரபு உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



